a

Wednesday, 9 May 2018

விடுதலைப் புலிகளின் கொள்கையினை தோற்கடிக்க முடியவில்லை

பௌதீக ரீதியில் நாம் பயங்கரவாதிகளை தோற்கடிக்க முடிந்த போதிலும் அவர்களின் கொள்கையினை தோற்கடிப்பதற்கு இன்னும் முடியாதுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற, சிறப்பு கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை நிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “கடந்த மூன்றரை வருடங்களாக சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பை பெற்று விடுதலைப் புலிகளின் அந்தக் கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கு நான் முயற்சித்தேன். எனினும் யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை கையாள்வது என்பது மிகுந்த சவாலாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்ற சமயம் அச்சவாலுக்கான விடைதேடும் பணி ஏழு வருடங்களால் தாமதமாகி இருந்ததனால் அவை மேலும் இக்கட்டான சூழ்நிலைக்கு உள்ளாகியிருந்தது.

மூன்று தசாப்தங்களாக சமூகத்தில் வேரூன்றியிருந்த போர் மனநிலையினை அகற்றி சகவாழ்வினை ஏற்படுத்துவதற்கு இன்னும் எம்மால் பாரிய வேலைகளை செய்ய வேண்டி இருக்கின்றது. ஒரு அரசாங்கத்தினால் மாத்திரம் அதனை செய்வது கடினமாகும். அதற்கு சமூகத்தின் அனைத்து தரப்புகளினதும் நேரடிப் பங்களிப்பு கட்டாயமாகத் தேவைப்படுகின்றது. அதனால் அந்த நோக்கை அடைவதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோமென அனைத்து தரப்புகளுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

நாட்டின் நிலையான அடித்தளம் தேசிய நல்லிணக்கமே ஆகும். உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்மானங்களை இயற்றத்தக்க கட்டமைப்பினை அறிமுகப்படுத்த வேண்டும். >அந்த நோக்கை வெற்றிகொள்வதற்கு தற்போது செயலில் இருந்துவரும் மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்துவது காலத்தின் தேவையாகும் என நம்புகிறேன். அத்துடன் எவ்வாறான விமர்சனங்கள் எழுந்த போதிலும் வடக்கு கிழக்கு மக்களின் மனங்களை வெல்லவேண்டுமாயின் மக்களின் விருப்பத்தையும், இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்தல் வேண்டும்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Blog Archive